Easy Tutorial
For Competitive Exams

பொதுத்தமிழ் - இலக்கியம் சிற்றிலக்கியங்கள்

* சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அமையும்.
* அகப்பொருள், அல்லது புறப்பொருளில் ஏதேனும் ஒரு துறையைப் பற்றியதாக அமையும்.
* சிற்றிலக்கியதிற்கு பிரபந்தம் என்ற பெயரும் உண்டு.
* சிற்றிலக்கியங்களில் இலக்கணத்தைக் கூறும் நூல்கள் = பட்டியல் நூல்கள்
* சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தை தெளிவாக கூறும் நூல் = பன்னிரு பாட்டியல்
* சிற்றிலக்கிய வகை = 96
* 96 வகை சிற்றிலக்கியங்களின் பெயரை முதலில் கூறிய நூல் = வீரமாமுனிவரின் சதுரகராதி

1.சதகம்2.பிள்ளைக்கவி
3.பரணி4.கலம்பகம்
5.அகப்பொருட்கோவை6.ஐந்திணைச் செய்யுள்
7.வருக்கக் கோவை8.மும்மணிக்கோவை
9.அங்கமாலை10.அட்டமங்கலம்
11.அனுராகமாலை12.இரட்டைமணிமாலை
13.இணைமணி மாலை14.நவமணிமாலை
15.நான்மணிமாலை16. நாமமாலை
17.பல்சந்தமாலை18.பன்மணிமாலை
19.மணிமாலை20புகழ்ச்சி மாலை
21.பெருமகிழ்ச்சிமாலை22.வருக்கமாலை
23.மெய்க்கீர்த்திமாலை24.காப்புமாலை
25. வேனில் மாலை26. வசந்தமாலை
27. தாரகைமாலை28. உற்பவமாலை
29. தானைமாலை30. மும்மணிமாலை
31. தண்டகமாலை32. வீரவெட்சிமாலை
33. வெட்சிக்கரந்தைமஞ்சரி34. போர்க்கெழுவஞ்சி
35. வரலாற்று வஞ்சி36. செருக்களவஞ்சி
37. காஞ்சிமாலை38. நொச்சிமாலை
39. உழிஞைமாலை40. தும்பைமாலை
41. வாகைமாலை42. வாதோரணமஞ்சரி
43. எண்செய்யுள்44. தொகைநிலைச்செய்யுள்
45. ஒலியந்தாதி46. பதிற்றந்தாதி
47. நூற்றந்தாதி48. உலா
49. உலாமடல்50. வளமடல்
51. ஒருபா ஒருபது52. இருபா இருபது
53. ஆற்றுப்படை54. கண்படைநிலை
55. துயிலெடை நிலை56. பெயரின்னிசை
57. ஊரின்னிசை58. பெயர் நேரிசை
59. ஊர் நேரிசை60. ஊர்வெண்பா
61. விளக்குநிலை62. புறநிலை
63. கடைநிலை64. கையறுநிலை
65. தசாங்கப்பத்து66. தசாங்கத்தயல்
67. அரசன்விருத்தம்68. நயனப்பத்து
69. முலைப்பத்து70. பாதாதிகேசம்
71. கேசாதிபாதம்72. அலங்காரபஞ்சகம்
73. கைக்கிளை74. மங்கலவள்ளை
75. தூது76. நானாற்பது
77. குழமகன்78. தாண்டகம்
79. பதிகம்80. சதகம்
81. செவியறிவுறூஉ82. வாயுறைவாழ்த்து
83. புறநிலைவாழ்த்து84. பவனிக்காதல்
85. குறத்திப்பாட்டு86. உழத்திப்பாட்டு
87. ஊசல்88. எழுகூற்றிருக்கை
89. நாழிகைவெண்பா90. சின்னப்பூ
91. விருத்தவிலக்கணம்92. முதுகாஞ்சி
93. இயன்மொழி வாழ்த்து94. பெருமங்கலம்
95. பெருங்காப்பியம்96. சிறுகாப்பியம்

திருக்குற்றால குறவஞ்சி

நூல் குறிப்பு :


  • திருக்குற்றாலக் குறவஞ்சி தமிழ்ச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று
  • இதுவே முதல் குறவஞ்சி நூல்
  • இந்நூலின் தலைவன் = திருக்குற்றால நாதர்
  • இந்நூலின் தலைவி = வசந்தவல்லி

ஆசிரியர் குறிப்பு :


  • இதன் ஆசிரியர் : திரிகூடராசப்ப கவிராயர்
  • இவர் குற்றாலத்திற்கு அருகே உள்ள மேலகரம் என்னும் ஊரில் பிறந்தவர்
  • மதுரையை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்க நாயக்கர் இவருக்கு “குறவஞ்சி மேடு” என்னும் நிலப்பகுதியை இனாமாக வழங்கினார்.
  • இவர் இயற்றிய மற்ற நூல்கள் : குற்றாலத் தலபுராணம், குற்றால மாலை


கலிங்கத்துப்பரணி

    நூல் குறிப்பு :


  • கலிங்கத்துப்பரணி ஆயிரக்கணக்கான யானைகளைப் போரில் கொன்ற விரனைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் பரணி எனப்படும்.
  • 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
  • பரணி இலக்கியங்களுள் தமிழில் தோன்றிய முதல் நூல்.
  • கலிங்க மன்னன் அனந்தபத்மன் மீது முதல் குலோத்துங்கச் சோழன் போர்தொடுத்து வெற்றி பெற்றான்.
  • அவ்வெற்றியைப் போற்றி பாடப்பட்ட நூலான இது. தோல்வியுற்ற கலிங்கநாட்டின் பெயரால் அமைந்துள்ளது.
  • இந்நூலில் 599 தாழிசைகள் உள்ளன.

பரணி இலக்கியங்கள்:


  • தக்கயாகப் பரணி
  • இரணியன் வதைப் பரணி
  • பாசவதைப் பரணி
  • மோகவதைப் பரணி
  • வங்கத்துப் பரணி
  • திராவிடத்துப் பரணி
  • சீனத்துப் பரணிதிருச்செந்துர்ப் பரணி சூரன் வதைப் பரணி)

ஆசிரியர் குறிப்பு:


  • ஆசிரியர் : சயங்கொண்டார்
  • காலம் : கி.பி. 12-ஆம் நூற்றாண்டு
  • ஊர் : தீபங்குடி, திருவாரூர் மாவட்டம்
  • முதல் குலோத்துங்கச் சோழனின் அரசவைப் புலவராகத் திகழ்ந்தவர்.
  • இவர் இயற்றிய மற்ற நூல்கள் : இசையாயிரம், உலா மற்றும் மடல்
  • பரணிக்கோர் சயங்கொண்டார்" எனப் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் பாராட்டியுள்ளார்
  • எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப்பரணியே என்றார் அறிஞர் அண்ணா.


முத்தொள்ளாயிரம்

  • மூவேந்தர்களைப் பற்றிய மூன்று தொள்ளாயிரம் பாடல்களைகத் கொண்டது.
  • ஆயினும்இந்நூல் முழுமையாக கிடைக்கவில்லை.
  • "புறத்திரட்டு" என்னும் நூல் வாயிலாக 108 வெண்பாக்களும், பழைய உரைநூல்களில் மேற்கோளாக 22 வெண்பாக்களும் கிடைத்துள்ளன.
  • இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
  • சேரர் பற்றி 23 பாடல்களும், சோழர் பற்றி 46 பாடல்களும், பாண்டியர் பற்றி 61 பாடைகளும் என மொத்தம் 130 பாடல்கள் கிடைத்துள்ளன
  • இதில் அகப்பாடல்கள் 75, புறப்பாடல்கள் 55 உள்ளன.


தமிழ்விடு தூது

தூது என்பது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.

தலைவன் மீது அன்பு கொண்ட தலைவி ஒருத்தி, தலைவனிடம் தூது அனுப்பி மாலை வாங்கி வருமாறு அன்னம் முதலிய 10 பொருள்களில் ஏதேனும் ஒன்றினை தூது அனுப்புவது தூது இலக்கியம் ஆகும்.

தூது இலக்கிய வகையை சார்ந்தது தமிழ்விடு தூது.

தமிழ்விடு தூது மதுரையில் கோவில்கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல்கொண்ட பெண் ஒருத்தி, தன் காதலை கூறிவருமாறு தமிழ் மொழியைத் தூதுவிடுவதாக அமைந்துள்ளது.

இந்த நூலில் தூது பெறுவோர் கடவுள். அதாவது சோமசுந்தரக் கடவுள்.

தூது விடுவோர் ஒரு பெண்

தூது செல்லும் பொருள் தமிழ்மொழி.

தமிழ்விடு தூது என்பது கலிவெண்பா வடிவில் எழுதப்பட்டது ஆகும்.

இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.

அமைப்பு

இரண்டு இரண்டு பூக்களை வைத்து தொடுக்கப்படும் மாலை கண்ணி.

அதே போல் இரண்டு இரண்டு அடிகளை வைத்து தொடுக்கப்படும் செய்யுள் கண்ணி ஆகும்.

தமிழ் விடு தூது நூல் 268 கண்ணிகளைக் கொண்டுள்ளது.

பதிப்பு :

1930-ல் உ.வே.சா. தமிழ்விடு தூது நூலை முதன் முதலாக பதிப்பித்தார்.

நூல் கூறும் பொருள்கள்

தூது செல்லும் தமிழ் மொழியின் பெருமைகளைக் கூறுதல்.

பிற பொருட்களைத் தூதாக அனுப்பாமைக்குரிய காரணங்களைத் தலைவி தூதுப் பொருளிடம் கூறுதல்.

தூது பெறும் தலைவன் ஆகிய சோமசுந்தரக் கடவுளைப் புகழ்ந்து கூறுதல்.

தலைவி தன் துன்பம் கூறுதல்.

தலைவி தமிழிடம் தன் தூதுச் செய்தியைக் கூறித் தூது வேண்டுதல்,என்ற பகுதிகளைக் கொண்டு திகழ்கின்றது தமிழ்விடு தூது.

தமிழ் மொழியின் பெருமைகள்

எண், பெயர், முறை, பிறப்பு, உருவம், மாத்திரை, முதல்நிலை, இடைநிலை, ஈற்றுநிலை, போலி, பதம், புணர்ச்சி என்ற 12 பருவங்களை உடையது. அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பாலும் உடையது.

பிள்ளைத் தமிழ் நூலுக்குரிய பத்துப் பருவங்களை கொண்டது.

இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் ஆகிய செய்யுள் ஈட்டச்சொற்கள் நான்கும்; பெயர், வினை, இடை, உரி ஆகிய செந்தமிழ்ச் சொற்கள் நான்கும்; அகத்திணைகள் ஏழும்; புறத்திணைகள் ஏழும்; எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, பா, பாவினம் என்ற எட்டும்; அணிகள் முப்பத்தைந்தும் கொண்ட மிக்க அழகுடையதாய் உள்ளது.

செப்பல் பண், அகவல் பண், துள்ளல் பண், தூங்கல் பண் ஆகிய பண்கள் உள்ளன.

ஐந்து வகை இசைக் கருவிகள் வெளியிடும் 103 பண்கள் உள்ளன.

வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், நகை, நடுவுநிலை, உருத்திரம் ஆகிய ஒன்பது சுவைகளைப் பெற்றுள்ளது.

பெரும் காப்பிய இலக்கியத்திற்குரிய 18 வர்ணனைகளைக் கொண்டுள்ளது.

தமிழ்மொழி தன் எல்லையாக மேல் கடல், கீழ்க்கடல், குமரி ஆறு, திருவேங்கடம் ஆகியவற்றைக் கொண்டது போன்றவற்றோடு இன்னும் பலவும் தமிழ்மொழியின் சிறப்புகளாக இந்நூலில் கூறப்படுகின்றன.

தலைவி தமிழைப் புகழ்கிறாள்:

தூது அனுப்புவோர் தூதுப் பொருளிடம் அதன் பெருமைகளை கூறித் தூது செல்ல வேண்டுவதை, எல்லாத் தூது நூல்களிலும் காணலாம்.

இந்த நூலில் தலைவி, தூது பொருளான தமிழை பல்வேறு பெருமைகளுடன் புகழ்ந்து கூறுகிறாள்.

சிவபெருமான், தடாதகைப் பிராட்டியார், விநாயகர், முருகன், திருநாவுக்கரசர், சுந்தரர், தொல்காப்பியர், மாணிக்கவாசகர், திருமூலர், கபிலர், பரணர், நக்கீரர், போன்ற கல்வி வடிவில் எல்லாருமாக நீ இருக்கின்றாய். ஆகவே, உன்னைக் கண்டு, உன் பொன் போன்ற அடிகளைப் புகல் இடமாகக் கொண்டு போற்றுகின்றேன் என்று தமிழை புகழ்கின்றாள்.

சிந்தாமணியாய் உள்ள உன்னைச் சிந்து என்று கூறிய நாக்கு சிந்தும். (சிந்தாமணி = ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று. சிந்து = சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.) உலகில் வெண்மை, செம்மை, கருமை, பொன்மை, பசுமை என்ற 5 நிறங்கள் உண்டு. ஆனால் உனக்கு நூறு (பா) வண்ணங்கள் உண்டு.

கைப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கார்ப்பு, இனிப்பு என்ற ஆறுவகைச் சுவைகள் (ரசம்) உண்டு. ஆனால் உனக்கு வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், நகை, நடுவுநிலை, உருத்திரம் என்ற 9 வகைச் சுவைகள் உண்டு.

அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பால்களுடன் ஆண்பால், பெண்பால் சேர்த்து உனக்கு ஐந்துப்பால் உண்டு என்று புகழ்கின்றாள்.

இறைவனைப் பற்றி

திரு ஆலவாய் என்ற இடத்தில் இருக்கும் செல்வர்

தேவியாகிய உமை அம்மையின் ஓர் பாகத்தில் தழைத்து மகிழ்ந்தவர்

எட்டுத் தெய்வ யானைகள் சுமக்கும் விமானத்தைக் கொண்ட கோயிலில் எழுந்தருளியுள்ளவர்

இந்திரன் வந்து வணங்கும்படி கடம்ப வனத்தில் வாழ்பவன் என இறைவனை பற்றி கூறுவதுடன் திருவிளையாடல் புராணம் கூறும் பல நிகழ்ச்சிகளும் இந்தூலில் கூறப்படுகின்றன.

தமிழ்விடு தூது சிறப்பு;

தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல.

கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம்.

ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கி உள்ளது தமிழ்விடு தூது.

தமிழின் இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது.

மேற்கோள்1:

மதுரைக்கு செல்லும் வழிகளைக் கூறி இறைவன் இருக்கும் கோவிலைச் சென்றடைந்தவுடன் தூது உரைக்கும் முறைமையை தமிழ்மொழியிடம் தலைவி கூறும் நயமான பாடல்:

காலைத்திருஅனந்தல் முன்னாகச் சேவிக்கும் காலத்து

உருஅனந்த தேவர் உடனே - மருவிஎதிர்

போற்றுவாய் நீயும் புரோகிதரை முன்அனுப்பித்

தோற்றரவு செய்து துதித்ததன்பின் - ஆற்றல்

அரிய சிவாகமத்தோர் ஆதிசைவர் தம்பால்

உரிய படையா ஒதுங்கி - அருமையுடன்

மூவர் கவியே முதல்ஆம் கவிஐந்தும்

மூவர்ஆய் நின்றார்தம் முன்ஓதி

விளக்கம்1:

காலையில் பள்ளி எழுச்சியில் இறைவனின் முன் அழகு உடைய தேவர்கள் வணங்குவர்.

அவர்களுடன் சேர்ந்து நீயும் போற்றி வணங்க வேண்டும்.

வேத ஆகமங்களை ஓதுவோரை முன்னே அனுப்பிப் பின் நீ தோன்றி வணங்க வேண்டும்.

அரிய ஆற்றல் உடைய ஆதி சைவர்களிடம் உரிய பொருட்களைச் சேர்ப்பிக்க வேண்டும்.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரின் தேவாரங்களையும், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் ஆகிய ஐந்து கவிகளையும் பாட வேண்டும்.

பின் செய்தியைக் கூறவேண்டும் என தமிழ்மொழியிடம் தலைவி உரைக்கிறாள்.

மேற்கோள்2:

மதுரைச் சொக்கநாதர் மீது காதல் கொண்ட ஒரு பெண், அவரிடம் தன் காதல் நோயைக் கூறி வருமாறு தமிழ்மொழியைத் தூது விடுக்கின்றாள். அதனால் தமிழைப் போற்றுகின்றாள்.

1. “சீர்கொண்ட கூடல் சிவராச தானி புரந்து

ஏர் கொண்ட சங்கத்து இருந்தோரும் - போர்கொண்டு"

விளக்கம்:

சிறப்பைக் கொண்ட கூடலாகிய மதுரை என்னும் சைவ சமயத் தலைநகரைப் பாதுகாத்து அழகைக் கொண்ட தமிழ்ச் சங்கத்தின்கண் புலவராக இருந்தவராகிய சோமசுந்தரக் கடவுளும்,

2. "இசையும் தமிழரசு என்று ஏத்தெடுப்பத் திக்கு

விசையம் செலுத்திய மின்னும் - நசையுறவே”

விளக்கம்:

போரில் விருப்பங்கொண்டு தமிழரசி என்று வணங்கத்தக்க எண்திசைகளிலும் பயணம் புரிந்த மீனாட்சியும்.

3. “செய்ய சிவஞானத்திரள் ஏட்டில் ஓரேடு

கையில் எடுத்த கணபதியும் - மெய்யருளால்”

விளக்கம்:

விருப்பம் அடையவே அழகிய திரண்டசிவஞான ஏடுகளுள் ஓர்ஏடு கையில் எடுத்த கணபதியும்,

4.“கூடல் புரந்து ஒருகால் கூடற்புலவர் எதிர்

பாடல் அறிவித்த படைவேளும் - வீடு அகலா”

விளக்கம்:

மெய்ஞ்ஞான அருளுடன் மதுரையைப் பாதுகாத்து ஒரு காலத்தில் மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவர்கள் எதிரில் பாடலை உணர்த்திய வேற்படைகொண்ட முருகனும்,

5. “மன்னும் மூவாண்டில் வடகலையும் தென்கலையும்

அன்னை முலைப்பாலில் அறிந்தோரும் - முன்னரே”

விளக்கம்:

வீட்டை விட்டுச் செல்ல முடியாத நிலை பெற்ற மூன்றாம் அகவையிலேயே வடமொழிக்கலைகளும் தென்மொழிக் கலைகளும் உமாதேவியாகிய தாயின் முலைப் பால் உண்டு அறிந்தவராகிய திருஞானசம்பந்தரும்,

6.“மூன்று வழியார் முன்முதலையுண்ட பிள்ளையைப்பின்

ஈன்றுதரச் சொல்லின் இசைத்தோரும் - தோன்று அயன்மால் “

விளக்கம்:

முன்னரே முதலை உண்ட பிள்ளையை மூன்று வழிகளைக் கொண்ட சிவபெருமான் முன்னர் மீண்டு பெற்றுத் தருமாறு தமிழ்ச் சொற்களைக் கொண்டு இசைபாடிய சுந்தரரும்,

7. “தேடி முடியா அடியைத் தேடாதே நல்லூரில்

பாடி முடியாப் படைத்தோரும் -நாடிமுடி”

விளக்கம்:

பிறப்பாகிய தோற்றம் கொள்கின்ற பிரமனும் திருமாலும் தேடிக் காணமுடியாத சிவபெருமானின் திருவடிகளைத் தேடாமலே திருநல்லூரில் தேவாரம் பாடித் தம் தலையில் முடியாகப் படைக்கப் பெற்றவருமாகிய அப்பர் எனப்படும் திருநாவுக்கரசரும்,

8. “மட்டோலைப் பூவனையார் வார்ந்து ஓலை சேர்த்து

பட்டோலை கொள்ளப் பகர்ந்தோரும் - முட்டாதே"

விளக்கம்:

தேன் பொருந்திய தாழம்பூவை அணியாதவராகிய சிவபெருமானும் விரும்பி ஓலைகளை வாரி, தம் அட்டவணையில், எடுத்துக் கொள்ளும்பான்மையில் திருக்கோவையாரையும் திருவாசகத்தையும் பாடியருளிய மாணிக்கவாசகரும்,

9. “ஒல்காப் பெருந்தமிழ் மூன்று ஓதியருள் மாமுனியும்

தொல்காப்பியம் மொழிந்த தொல்முனியும் - மல்காச் சொல்”

விளக்கம்:

முடிவற்றதேயாகிய குறையாத பெருமைக்குரிய சொல் (இயல், இசை, நாடகம் என்னும்) முத்தமிழை ஓதிய மாமுனியாகிய அகத்தியரும். தொல்காப்பியம் உரைத்தருளிய தொல்முனியாகிய தொல்காப்பியரும்,

10. “பாத்திரம் கொண்ட பதிபால் பாய் பசுவைப் பன்னிரண்டு

சூத்திரம் கொண்டே பிணித்த தூயோரும் - நேத்திரமாம்”

விளக்கம்:

பாடல்வலிமையைக் கொண்டே - தம் மீது சிவஞானபோதத்தின் பன்னிரண்டு நூற்பாக்களைக் கொண்டே சிவபெருமான்மீது பாயும் பசுவாகிய உயிர்களைக் கட்டிய தூயோராகிய மெய்கண்ட தேவரும்.

11. “தீதில் கவிதைத் திருமாளிகைத் தேவர்

ஆதி முனிவர் அனைவோரும் - சாதி உறும்”

விளக்கம்:

கண்களாகும் தீமையில்லாக் கவிதைகளைக் கொண்ட திருவிசைப்பா இயற்றிய திருமாளிகைத் தேவர் முதலிய ஒன்பது முனிவர்களும்,

12. “தந்திரத்தினால் ஒழியாச் சார்வினையைச் சாற்றுதிரு

மந்திரத்தினால் ஒழித்த வல்லோரும் - செந்தமிழில்”

விளக்கம்:

சாதி, புரியும் கிரியைகள் ஆகியவற்றால் ஒழிக்க முடியாத வந்தடைகின்ற வினைகளைச் சொல்லுகின்ற திருமந்திரத்தால் நீக்கிய வல்லவராகிய திருமூலரும்,

13. “பொய்யடிமை இல்லாப் புலவர் என்று நாவலர்சொல்

மெய்யடிமைச் சங்கத்து மேலோரும் - ஐயடிகள்”

விளக்கம்:

செந்தமிழில் பொய்யடிமை இல்லாப் புலவர்கள் என்று நாவலர்கள் புகழ்ந்து சொல்கின்ற வாய்மைக்கு அடிமைகளாகிய சங்கப் புலவர்களாகிய மேன்மையானவர்களும்.

14. “காடவரும் செஞ்சொற் கழறிற்றறிவாரும்

பாடஅரும் தெய்வமொழிப் பாவலரும் - நாடஅரும்”

விளக்கம்:

ஐயடிகள் காடவர்கோனும் செம்மையான சொல்லைக் கொண்ட கழறிற்றறிவராகிய சேரமான் பெருமாள் நாயனாரும் பாட அருமையான தெய்வ மொழியாகிய திருக்குறளை இயற்றிய பாவலரான திருவள்ளுவரும்,

குறிப்பு:

ஐயடிகள் காடவர்கோன் க்ஷேத்திரத்திருவெண்பா இயற்றியவர்.

கழறிற்றறிவார் பாடியவை: திருக்கைலாய ஞானவுலா, பொன்வண்ணத்தந்தாதி, திருவாரூர் மும்மணிக் கோவை

15. “கல்லாதார் சிங்கமெனக் கல்வி கேள்விக்கு உரியர்

எல்லாரும் நீயாய் இருந்தமையால் - சொல் ஆரும்”

விளக்கம்:

கல்வியறிவிற்கும் கேள்வியறிவிற்கும் உரிய அனைவருமாகி நீ இருந்தமையால் கல்லாதவர்கள் (உன்னைச்) சிங்கமெனவும்.

16. “என்னடிகளே உன்னைக்கண்டு ஏத்தின் இடர் தீருமென்றுஉன்

பொன்னடிகளே புகலாப் போற்றினேன் - பன்னியமென்”

விளக்கம்:

சொற்கள் நிறைந்த என்செய்யுள் அடிகளே (தமிழாகிய) உன்னைக் கண்டு வணங்கினால், துன்பம் நீங்கும் என்று உன் அழகிய அடிகளையே புகலிடமாகக் கொண்டு போற்றினேன்.


நந்திக் கலம்பகம்

  • கலம்பகம்- கலம் + பகம்
  • கலம் - 12 உருபுகளை கொண்டது
  • பகம்(பாதி) - 6 உருபுகளை கொண்டது
  • கலம்பகம் பதினெட்டு உருபுகளை கொண்டது.
  • கலம்பக நூல்களில் இதுவே முதல் நூல்.
  • கலம்பகம் என்பது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
  • பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனை பாட்டுடைத் தலைவனாக கொண்டது இந்நூல்.
  • தமிழ் மீது கொண்ட காதலால் மன்னன் உயிர் விட்டான்.
  • “நந்தி கலம்பகத்தால் இறந்ததை நாடறியும்” என்பது சோமேசர் முதுமொழி வெண்பா பாடல்
  • 144 பாடல்கள் உள்ளன
  • ஆசிரியர் பெயர் தெரியவில்லை.


விக்ரமசோழன் உலா

நூல் குறிப்பு:


  • உலா என்பது 96 வகை சிற்றிலக்கியனங்களுள் ஒன்று.
  • இறைவன், மன்னன், மக்களுள் சிறந்தோர் முதலியோரின் சிறப்புகளை எடுத்துக்கூறும் நோக்கிலேயே இவ்வகை சிற்றிலக்கியங்கள் எழுதப்பெற்றன.
  • உலா என்பதற்கு “ஊர்கோலம் வருதல்” என்பது பொருள்.
  • பாட்டுடைத் தலைவன் வீதியில் உலா வர அவனைப் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அறிவை, தெரிவை, பேரிளம் பெண் என எழுவகைப் பெண்களும் காதல் கொள்வதாய்க் அமைத்துப் பாடுவது உலா.
  • முதற் குலோத்துங்கசோழனின் நான்காவது மகன் விக்ரமசோழன்.
  • அவனின் தயார் மதுராந்தகி.
  • இவர் கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராகக்கொண்டு ஆட்சி செய்தார்.

ஆசிரியர் குறிப்பு:


  • இயற்பெயர் = ஒட்டக்கூத்தர்
  • சிறப்புப்பெயர் = கவிச்சக்ரவர்த்தி
  • சிறப்பு = விக்கிரமச்சோழன், இரண்டாம் குலோத்துங்கசோழன், இரண்டாம் இராசராசன் ஆகிய மூன்று மன்னர்களின் அவையிலும் செல்வாக்கோடு விளங்கியவர்.
  • இயற்றிய நூல்கள் = மூவருலா, தக்கயாகப்பரணி, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்
  • காலம் = பனிரெண்டாம் நூற்றாண்டு


முக்கூடற்பள்ளு

  • இதுவே பள்ளு நூல்களில் முதல் நூல்
  • இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. சிலர் எண்ணாயிணப் புலவர் என்பர்
  • திருநெல்வேலிக்குச் சிறிது வடகிழக்கில் தண்பொருநை, சிற்றாறு, கோதண்டராம ஆறு ஆகிய மூன்று ஆறுகளும் கலக்கும் இடத்திற்கு வடக்கே உள்ள சிற்றூர் முக்கூடல்.
  • அங்குள்ள இறைவனாகிய அழகர் மீது பாடப்பட்டது இந்நூல்.
  • சைவ வைணவங்களை ஒருங்கிணைக்கும் இலட்சியங் கொண்ட நூல், “முக்கூடற்பள்ளு” ஆகும்.
  • இந்நூலை இயற்றியவர் பெயர் தெரியவில்லை.
  • இது சிந்தும் விருத்தமும் பரவிவர பாடப்பெறும்.
  • இதன் காலம் பதினேழாம் நூற்றாண்டு
  • “முக்கூடல் நாடகம்” படைத்தவர் = சின்னத்தம்பி வேளாளர்


காவடிசிந்து

  • பெயர் = அண்ணாமலையார்
  • ஊர் = திருநெல்வேலி மாவட்டம் சென்னிகுளம்
  • பெற்றோர் = சென்னவர் – ஓவுஅம்மாள்
  • நூல்கள் = காவடிச்சிந்து, வீரை அந்தாதி, கோமதி அந்தாதி, வீரைப்பிள்ளைத்தமிழ்
  • சிறப்பு = இளமையிலே நினைவாற்றலும் படைப்பாற்றலும் மிக்கவர்.
  • காலம் = 1861–1890
  • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு அருகிலுள்ள வளமான ஊர் கழுகுமலை.
  • இங்கு கோவில் கொண்டுள்ள முருகனின் சிறப்பை எளிய இனிய இசைப்பாடல்களால் போற்றிப் பாடப் பெற்றது இந்நூல்.


திருவேங்கடத் அந்தாதி:

அந்தாதி:


  • அந்தாதி 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
  • அந்தம் = இறுதி, ஆதி = முதல்
  • ஒவ்வொரு பாடலிலும் உள்ள இறுதி எழுத்தோ, அசையா, சீரோ அடியோ அதற்கு அடுத்து வரும் பாடலின் முதலாக வரும்படி அமைத்துப் பாடுவது அந்தாதி எனப்படும்.

திருவேங்கடத் தந்தாதி:


  • இந்நூலின் ஆசிரியர் பிள்ளை பெருமாள் ஐயங்கார்
  • இவர், “அழகிய மணவாளதாசர், திவ்வியக்கவி” எனவும் அழைக்கப்படுவார்.
  • இவர் இயற்றிய எட்டு நூல்களின் தொகுதியை “அஷ்டப்பிரபந்தம்” என்று அழைப்பர்.
  • “அஷ்டப்பிரபந்தம் கற்றவன் அரைப் பண்டிதன்” என்னும் பழமொழி இந்நூலின் உயர்வைப் வெளிப்படுத்தும்.
  • இவர் 1623 முதல் 1659 வரை மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னரின் அவையில் ஓர் அலுவலராய் அமர்ந்து வாழ்க்கை நடத்தி வந்தார்.


முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்

பிள்ளைத்தமிழ்:


  • முதல் பிள்ளைத்தமிழ் நூல் = ஒட்டக்கூத்தரின் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்
  • பெரியவர்களை குழந்தையாக பாவித்து பாடுதல் ஆகும்
  • இதனை “பிள்ளை கவி, பிள்ளைப் பாட்டு” எனவும் கூறுவர்
  • இது இரு வகைப்படும் = ஆண் பால் பிள்ளைத்தமிழ், பெண்பால் பிள்ளைத்தமிழ்
  • பிள்ளைத்தமிழ் பாடாமல் விலக்கு அளிக்கப்பட்ட கடவுள் = சிவன்

முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்:


  • இதன் ஆசிரியர் குமரகுருபரர்
  • பெற்றோர் – சண்முகசிகாமணிக் கவிராயர், சிவகாமி சுந்தரியம்மை
  • ஊர் – திருவைகுண்டம்
  • இயற்றிய நூல்கள் – கந்தர்கலிவெண்பா, மதுரை மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, நீதிநெறி விளக்கம் முதலியன.
  • சிறப்பு – தமிழ், வடமொழி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர். திருப்பணந்தாளிலும், காசியிலும் தம்பெயரால் மேடம் நிறுவி உள்ளார்.
  • இறப்பு – காசியில் இறைவனடி சேர்ந்தார்.
  • காலம் – பதினேழாம் நூற்றாண்டு.


பெத்தலகேம் குறவஞ்சி

  • பெத்தலகேம் குறவஞ்சியில் உலாவரும் மன்னராக இயேசுவாகவும் தேவமோகினியாக தலைவி சீயோன் மகளாகவும், குறவஞ்சி விசுவாசமாகவும் குறி கூறுதல் தீர்க்க தரிசனமாகவும். சிங்கன் குருவாகவும், நூவன் உபதேசியாகவும், அவர்கள் பிடிக்கும் பறவைகளாக மக்களும் அதற்குப் பயன்படும் வலையாக இறைவாக்கு என்ற நற்செய்தியும் உருவாக்கப்பட்டது.
  • இந்நூல் முற்றுருவகமாகத் திகழ்வது தனிச்சிறப்பு ஆகும்.
  • இந்நூலின் ஆசிரியர் தஞ்சை வேதநாயக சாத்திரியார்.
  • பெற்றோர் = தேவசகாயம், ஞானப்பூ அம்மையார்
  • ஊர் = திருநெல்வேலி
  • தஞ்சையில் மதபோதராக விளங்கிய சுவார்ட்ஸ் பாதிரியார் இவரை தம் மாணவராக ஏற்றுக்கொண்டார்.
  • தஞ்சையை ஆண்ட சரபோசி மன்னரின் உற்ற தோழராக விளங்கினார்.
  • நூல்கள் = ஞானத்தச்சன், ஞானவுலா, ஆரணாதிந்தம்.
  • இவரை “ஞானதீபக் கவிராயர்” என்றும் “அண்ணாவியார்” என்றும் போற்றுவர்.


அழகர் கிள்ளை விடு தூது

  • திருமாலிருஞ்சோலை மலையில் கோவில் கொண்டிருக்கும் அழகரிடத்து பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை என்ற புலவர் கிளியைத் தூது விடுவதாக அமைத்துப் பாடியிருப்பது அழகர் கிள்ளை விடு தூது ஆகும்.
  • இந்நூல் 250 ஆண்டுகளுக்கு முந்தைய நூலாகும்.
  • இந்நூல் காப்பு வெண்பா ஒன்றையும் 239 கண்ணிகளையும் உடையது.
  • பாட்டின் இரண்டு அடி கண்ணி எனப்படும்.
  • சொக்கநாதப் பிள்ளை மரபினர் பலபட்டடைக்கணக்கு என்னும் ஒருவகைப் பணியைச் செய்து வந்தனர்.
  • இவர் தந்தையார் பெயர் சொக்கலிங்கம் பிள்ளை.
  • நூல்கள் = மதுரை மும்மணிக்கோவை, தென்றல் விடு தூது போன்றவை


இராசராசசோழன்

இரண்டாம் இராசராசனைப் பாராட்டி ஒட்டக்கூத்தர் பாடியது இராசராசசோழன் உலா ஆகும்

உலா:

  • உலா என்பது சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.
  • உலா என்பதற்கு “பவனி வருதல்” என்பது பொருள்.
  • தலைவன் வீதியில் உலா வர அவனைப் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்னும் ஏழு வகைப் பருவ மகளிரும் காதல் கொள்வதாக அமைத்து பாடுவது உலா ஆகும்.
  • இது கலிவென்பாவால் இயற்றப்படும்.
  • இதில் பாட்டுடைத் தலைவனின் சிறப்பு, நீராடல், ஒப்பனை செய்தல், பரிவாரங்கள் புடைசூழத் தன் ஊர்தியில் ஏறி வரல் ஆகியவற்றை உலாவின் முன்னிலை என்பர்.
  • உலாவரும் தலைவனைக் கண்டு காதல் கொண்ட ஏழு பருவ மகளிர் தனித்தனியாக கூறுவன உலாவின் பின்னிலை எனப்படும்.
  • ஏழு பருவப் பெண்களின் வயது = பேதை(5-7), பெதும்பை(8-11), மங்கை(12-13), மடந்தை(14-19), அரிவை(20-25), தெரிவை(26-32), பேரிளம்பெண்(33-40).

ஆசிரியர் குறிப்பு:


  • இராசராசசோழன் உலாவை பாடியவர் ஒட்டக்கூத்தர்.
  • இவர், “கவிச்சக்ரவர்த்தி, கவிராட்சசன்” என்றெல்லாம் புகழப்படுவார்.
  • இவர், விக்ரமசோழன், இரண்டாம் குலோத்துங்கச் சோழன், இரண்டாம் ராசராசன் ஆகிய மூன்று மன்னர்களின் அவையிலும் செல்வாக்கோடு இருந்தவர்.
  • இம்மூவரைப் பற்றி ஒட்டக்க்கூத்தர் பாடியதே, “மூவருலா”
  • இவரின் இயற் பெயர் = கூத்தர்
  • ஓட்டம்(பந்தயம்) வைத்துப் பாடுவதில் வல்லவர் ஆதலால் இவர் ஒட்டக்க்கூத்தர் எனப்பட்டார்.

Share with Friends